தமிழ்நாட்டில் அடுத்த எட்டு மாதங்களில் 1252 கிராமங்களில் தடையில்லா இணையதள வசதி கிடைக்கும் எனத் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் இ ஆஃபீஸ் அமைப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, தமிழக கேபிள் டிவி தலைவர் குறிஞ்சி என் சிவக்குமார் மற்றும் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது: ஐடி துறையில் ஓர் ஆண்டு காலத்தில் மிக பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது எனவும், இன்று இஆபீஸ் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஒரு மாவட்டத்திற்கு சராசரியாக 35 டன் பேப்பர் தேவைபடுகிறது. இஆபீஸ் அமைப்பதன் மூலம் பேப்பர் சேமிப்பு ஏற்படும், அதோடு மரங்களை அழிப்பது குறையும் என்றும் கூறினார்.
இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் காகிதமில்லா இ-ஆபீஸ் முறையை அமல்படுத்துவதிலுள்ள சிக்கல்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடத்தினேன். இதில் அலுவலர்களின் கருத்துகளை கேட்டறிந்து அதனை சரி செய்வதற்கான முன்னெடுப்புகள் குறித்து விளக்கினேன். pic.twitter.com/Ant60PcEDh
— Mano Thangaraj (@Manothangaraj) September 19, 2022
இதற்காக மாவட்ட அளவில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இசேவை மையங்களில் 200 வகையான சேவை வழங்கபடுகிறது. தமிழகத்தில் 200 இ-சேவை மையங்களில் இருந்து 300 ஆக மாற்றப்படும். ஏழு மாவட்டங்களில் ஐடி பார்க் அமைக்க அறிவித்துள்ள நிலையில் எஞ்சிய மற்ற மாவட்டத்திலும் படிப்படியாக அறிவிக்கப்படும்.
தகவல் தொடர்புத் துறைக்கு கடந்த காலங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை, ஆனால் தற்போது சாப்ட்வேர் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதோடு 7 மாவட்டங்களில் ஐடி பார்க் அமைக்க முதல்வர் அறிவித்துள்ள நிலையில், எஞ்சியுள்ள மாவட்டத்தில் ஐடி பார்க் படிபடியாக அறிவிக்கப்படும். ஈரோட்டில் ஐடி பார்க் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
தகவல் தொடர்புத் துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் செல்போன் டவர் அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த 8 மாதங்களில் தமிழகத்தில் உள்ள12,525 கிராமங்களிலும் தடையில்லா இணைய தள வசதி கிடைக்கும் என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, கேபிள் வாரியத் தலைவர் குறிஞ்சி சிவக்குமார் ஆகியோர் பெரியார் நினைவகத்திற்கு சென்று பெரியார் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.







