சென்னையில் மெட்ரோ ரயில் பணிக்கு பயன்படுத்திய சுமார் 40 லட்சம் மதிப்பிலான க்ரேனை திருடி ஆந்திரா மாநிலத்தில் விற்பனை செய்த மெட்ரோ ரயில் பணி ஊழியர்கள் மற்றும் திருட்டு வாகனத்தை வாங்கியவர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பொன்னேரி பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் மேடவாக்கம் பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிக்காக தனது 40 லட்சம் மதிப்பிலான க்ரேன் வாகனத்தை வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 11-ம் தேதி மேடவாக்கம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த க்ரேன் வாகனம் காணவில்லை என்று அவர் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து குற்றப்பிரிவு பெண் ஆய்வாளர் புஷ்பம் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் வாகனம் நிறுத்தப்பட்டுள்ள பகுதியின் அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்பொழுது நான்கு பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து க்ரேனை திருடி செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த காட்சியை கண்ட சிசிடிவி கேமராவை பின்தொடர ஆரம்பித்தனர்.
தனிப்படை போலீசார் சென்னை மேடவாக்கத்தில் தொடங்கி ஆந்திரா மாநிலம் கடப்பாவை தாண்டி சுமார் 250க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து திருடு போன க்ரேன் வாகனத்தை கண்டுபிடித்துள்ளனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நரசிம்ம ரெட்டி என்பவரிடம் இருந்து மீட்கப்பட்ட க்ரேன் வாகனத்தை தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் நரசிம்ம ரெட்டியின் கம்பெனிக்கு மாத தவணைக்கு க்ரேன் தேவைப்பட்டதால் கார்த்திக் என்பவரிடம் வாடகைக்கு கேட்டுள்ளார் என்று அவர் கூறியுள்ளார் என தெரியவந்தது. பின்னர் க்ரேனை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் நரசிம்ம ரெட்டியை கைது செய்து சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையம் அழைத்து வந்தனர். நரசிம்ம ரெட்டியின் வாக்குமூலத்தை தொடர்ந்து கார்த்திக் என்பவரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் கார்த்திக்கின் நண்பரான முரளி சென்னை எண்ணூர் பகுதியில் மெட்ரோ ரயில் பணி செய்து வருகிறார் என்றும், மாத வாடகைக்கு க்ரேன் உள்ளதா என கேட்டதை கார்த்திக் முரளியிடம் கேட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து முரளி அவரது நண்பரான மேடவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணி செய்யும் சர்மா என்பவரை தொடர்பு கொண்டு மாத வாடகைக்கு க்ரேன் தேவைப்படுகிறது என்ற தகவலை கூறியுள்ளார்.
அதன் பின்னர் கார்த்திக், முரளி, சர்மா, திருநாவுக்கரசு ஆகிய 4 பேர் சதி திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி மேடவாக்கம் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருந்த க்ரேனை முரளி மற்றும் சர்மா இருவரும் திருடி சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் மேடவாக்கத்தில் இருந்து க்ரேனை திருடி சென்ற நிலையில், கார்த்திக் மற்றும் திருநாவுக்கரசு ஆகிய இருவரும் போரூர் சுங்கச்சாவடியில் காத்துகொண்டிருந்தனர்.
க்ரேன் போரூர் சுங்கச்சாவடிக்கு சென்றதும் நான்கு பேரும் ஒன்றிணைந்து இருவர் பாதி தூரம் இருசக்கர வாகனத்தில் செல்வதும், இருவர் க்ரேனை ஓட்டி செல்வதுமாக மாறி மாறி ஓட்டிக்கொண்டு ஆந்திரா மாநிலம் சென்று நரசிம்ம ரெட்டியிடம் வாகனத்தை கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் க்ரேன் வாகனத்தை மாத வாடகைக்கு நரசிம்ம ரெட்டியிடம் கொடுத்த பின்பு கார்த்திக், முரளி, சர்மா, திருநாவுக்கரசு ஆகிய நான்கு பெரும் ரூபாய் ஐந்து லட்சம் ரொக்கப் பணம் மற்றும் மூன்று மாத வாடகைக்கான ரூபாய் ஐந்து லட்சத்திற்கான காசோலையை முன்கூட்டியே பெற்றுகொண்டுள்ளனர் என்ற தகவலும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து மீதமுள்ள முரளி, சர்மா, திருநாவுக்கரசு ஆகியோரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் கார்த்திக், எண்ணூர் மெட்ரோ ரயில் பணி ஊழியர் முரளி, மேடவாக்கம் மெட்ரோ ரயில் பணி ஊழியர் சர்மா, திருநாவுக்கரசு மற்றும் திருட்டு வாகனத்தை வாங்கிய நரசிம்ம ரெட்டி ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து பள்ளிக்கரணை குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.
இந்த விசாரணையில் சிறப்பாக செயல்பட்டு காணாமல் போன 40 லட்சம் மதிப்பிலான க்ரேனை இரவும் பகலும் தூக்கமில்லாமல் உழைத்து ஆந்திரா மாநிலம் வரை சென்று கண்டிப்பிடித்து அதை திருடியவர்களை துரிதமாக கைது செய்த குற்றப்பிரிவு பெண் ஆய்வாளர் புஷ்பம் உள்ளிட்ட தனிப்படையினரை பள்ளிக்கரணை காவல் மாவட்ட துணை ஆணையர் ஜோஷ் தங்கையா சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.