பழனியில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கல்யாணம் 11ம் தேதியும், தேரோட்டம் 12ம் தேதியும் நடைபெற உள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவில் மிகவும் பிரசித்தப்பெற்ற வழிபாட்டு தலமாகும். இங்கு தைப்பூசம், பங்குனிஉத்திரம், வைகாசி விசாகம் போன்ற திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இதன்படி இன்றுபழனியில் வைசாக விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகிஅம்மன் கோவிலில் வைகாசி விசாகத்திருவிழா இன்று காலை 11மணிக்கு கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான அருள்மிகு முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் ஆறாம் நாள் திருவிழாவான வருகிற 11ம்தேதியும், திருத்தேரோட்டம் ஜூன் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30மணியளவில் நடைபெறவுள்ளது.
திருவிழா நடைபெறும் 10 நாட்களும் தினமும் இரவு தங்கமயில், வெள்ளியானை, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக்காமதேனு, தங்கக்குதிரை போன்ற வாகனங்களில் முத்துக்குமாரசாமி நான்கு ரதவீதிகளிலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
வைகாசி விசாக திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வைகாசி விசாகத் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகளை பழனி திருக்கோவில் இணைஆணையர் நடராஜன், துணை ஆணையர் லட்சுமி ஆகியோர் செய்து வருகின்றனர்.








