தடுப்பூசி ஒன்றே கொரோனாவுக்கு எதிரான சக்தி மிகுந்த ஆயுதம் என, முதலமைச்சர்களுடனான கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் 46 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம், பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
![](https://i0.wp.com/news7tamil.live/wp-content/uploads/2021/05/Narendra-Modi-1.jpg?resize=800%2C450&ssl=1)
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு அப்பாற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்பான விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
தடுப்பூசிதான் கொரோனாவுக்கு எதிரான சக்தி மிகுந்த ஆயுதம் என தெரிவித்த பிரதமர், தடுப்பூசி தொடர்பான தவறான மாயைகளை களைய அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தடுப்பூசி தட்டுப்பாட்டைப் போக்க, உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.