மறைந்த எழுத்தாளர் கி.ரா.விற்கு கோவில்பட்டியில் சிலை: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரிசல் இலக்கியத்தின் தந்தை எனப்படும் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன் புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 99. அவரது…

மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கரிசல் இலக்கியத்தின் தந்தை எனப்படும் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன் புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 99. அவரது இறுதிச்சடங்கு அவருடைய சொந்த ஊரான கோவில்பட்டி அருகில் உள்ள இடைச்செவல் கிராமத்தில் அரசு மரியாதையுடன் நடக்க இருக்கிறது.

அவர் மறைவுக்கு எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மறைந்த எழுத்தாளர் கி.ராவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கோவில்பட்டியில் சிலை நிறுவப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுடுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் இலக்கியத்திற்குச் செழுமை சேர்த்த கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (கி.ரா.) ஏட்டறிவைக் காட்டிலும் பட்டறிவால் பல இலக்கியப் படைப்புகளைத் தந்தவர். வட்டார வழக்கு சார்ந்த இலக்கியப் படைப்புகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

மறைந்த எழுத்தாளர் கி.ரா. படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை, அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும், அவரது நினைவைப் போற்றும் வகையிலும் அவரது படைப்பாளுமையை வெளிப் படுத்தும் வகையிலும் அவருடைய புகைப்படங்கள் – படைப்புகள் ஆகியவற்றை மாணவர்களும் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில் ஓர் அரங்கம் நிறுவப்படும்.

கரிசல் இலக்கியத்தை உலகறியச் செய்த பிதாமகர் கி.ராவுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.