திருப்பூரில் சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்தவரை தூளி கட்டி தூக்கி சென்ற அவலம்!

உடுமலை அருகே சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்தவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தொட்டில் கட்டி தூக்கி சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகத்தில் குளிப்பட்டி, குருமலை, மாவடப்பு உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 6000 க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் சாலை வசதி கேட்டு பல ஆண்டுகளாக போராடி வந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பின் ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மாவட்ட ஆட்சியர் சாலை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் உடுமலை வனத்துறை அதிகாரிகள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபடும் மலை கிராம மக்கள் மீது பொய் வழக்குகள் பதிந்து சாலை அமைக்க விடாமல் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு குருமலை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக நகரத்திற்கு சென்று பொருட்களை வாங்கிக்கொடு மலைப்பகுதிக்கு திரும்பியபோது வழியில் பாம்பு கடித்துள்ளது.

இதை அறிந்த மலை கிராம மக்கள் பாம்பு கடித்தவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சாலை வசதி இல்லாததால் உடனடியாக தொட்டில் கட்டி தூக்கி சென்றுள்ளனர். தொடர்ந்து மலை கிராம மக்களுக்கு அவசர மருத்துவ தேவைகளுக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பல்வேறு சமயங்களில் உயிர் சேதமும் ஏற்படுகிறது.  எனவே சாலை அமைக்க போர்க்கால அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.