வனத்துறையினரிடம் சிக்காமல் போக்கு காட்டி வந்த T23 புலி நேற்றிரவு மயக்க ஊசியும் செலுத்தியும் தப்பியதையடுத்து தற்போது உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா, தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த 22 நாட்களில் 40க்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் நான்கு பேரை கொன்ற T23 புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டனர்.
இதனையடுத்து தமிழ்நாடு, கேரள மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர், 8 கால்நடை மருத்துவர்கள், 2 கும்கி யானைகள், 3 மோப்ப நாய்கள், வனப்பகுதியில் 80-க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் மற்றும் டிரோன் கேமரா மூலம் மசினகுடி வனப்பகுதியில் தேடி வந்தனர். யார் கண்ணிலும் சிக்காமல் T23 புலி போக்கு காட்டி வந்தது.
இந்நிலையில் போஸ்பரா பகுதிக்கு புலி இடம் பெயர்ந்ததை வனத்துறையினர் கண்டறிந்தனர். புலி இருக்கும் இடத்தை உறுதி செய்த வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அதை பிடிக்க முயன்றனர். அப்போது T23 புலி அடர்ந்த புதர் பகுதிக்குள் மறைந்து தப்பியது. வனத்துறையினர் நான்கு குழுக்களாகப் பிரிந்து 20 வது நாளாக புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்றிரவு தெப்பக்காட்டில் இருந்து மசினகுடிக்கு வரும் நெடுஞ்சாலையில் T23 புலி நடந்து சென்றுகொண்டிருந்தது. அதைக் கண்ட சில வாகன ஓட்டிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கால்நடை மருத்துவர்களுடன் சென்ற வனத்துறையினர், T23 புலிக்கு 4 முறை மயக்க ஊசி செலுத்தினர். அதில் 2 மயக்க ஊசிகள் புலியின் மீது பட்டது. இருந்தும் அந்த புலி அடர்ந்த வன பகுதிக்குள் தப்பி ஓடியது. அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் அந்த புலியை தேடும் பணியை துரிதப்படுத்தினர்.
இரவானதால் புலி மயங்கி விழுந்த இடத்தை கண்டறிய, உதவியாக 2 கும்கி யானைகளும் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை 6 மணி அளவில் வனத்துறையினர் மீண்டும் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இன்று பிற்பகல் மாயார் சாலையில் சுற்றித்திரிவதாக வனத்துறையினருக்க தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்த வனத்துறையினர் புலிக்காக காத்திருந்தனர். நீண்ட நேரமாக புதருக்குள் மறைந்திருந்த புலி வெளியே வந்தது. பின்னர் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி புலியை பிடித்தனர். இதனையடுத்து புலி கூண்டில் அடைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடு பட்டுவருகிறனர்.










