அதிமுகவை பொறுத்தவரை ஓபிஎஸ் மற்றும் சசிகலாவின் கதை, முடிந்த கதை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், வரும் டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளன்று, அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் நடைபெறும் அஞ்சலி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ தலைநகராக உள்ள சென்னையின் அரசு மருத்துவமனைகளில் தவறான சிகிச்சை அளிக்கப்படுவதால், தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அரசு மருத்துவமனைகளுக்கு செல்வதற்கே மக்கள் அஞ்சுகிறார்கள். ஏற்கனவே கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் உயிரிழந்திருக்கிறார். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. இதன்மூலம் இந்த திமுக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை நிர்வாகத்தில் சீர்கேடு ஏற்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது.
ஏற்கனவே மருத்துவமனைகளில் மருந்து மாத்திரைகள் இல்லாத சூழ்நிலையில், தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் இது போன்ற தவறான சிகிச்சைகள் அளிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. அரசு மருத்துவமனைகளில் சாதாரண மருந்துகள் கூட இல்லாமல் மக்கள் அவதியுறுகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது மகன் உதயநிதி நடித்த திரைப்படங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழக மக்களுக்கும் கொடுக்க வேண்டும்.
அதிமுகவை பொறுத்தவரை ஓபிஎஸ் மற்றும் சசிகலாவின் கதை முடிந்த கதை. அதனை பற்றி எதுவும் கூறமுடியாது. ஆன்லைன் விளையாட்டுகளைப் பொறுத்தவரை திமுக அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. ஆன்லைன் விளையாட்டுகளை வளர்த்து விடுகின்ற வேலையை திமுக அரசு மேற்கொள்கிறது” என்று தெரிவித்தார்.