உண்ணாவிரத போராட்டத்தில் கைது செய்யப்பட்ட இபிஎஸ் விடுதலை

தடையை மீறி உண்ணாரவிரத போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 750 பேரை போலீசார் விடுதலை செய்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக நேற்று அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.…

தடையை மீறி உண்ணாரவிரத போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 750 பேரை போலீசார் விடுதலை செய்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக நேற்று அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இருக்கை விவகாரத்தில் தம்முடைய முடிவே இறுதியானது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

இதை எதிர்த்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார். ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆனாலும், தடையை மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் போலீசார் அடைத்து வைத்திருந்தனர்.

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 750 பேரை போலீசார் இன்று மாலை விடுதலை செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.