“ஆம் ஆத்மி கட்சியை நசுக்குவதே அமலாக்கத்துறையின் நோக்கம்!” – அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி கட்சியை நசுக்குவதே அமலாக்கத்துறையின் நோக்கம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி…

ஆம் ஆத்மி கட்சியை நசுக்குவதே அமலாக்கத்துறையின் நோக்கம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  அவரை 28-ந் தேதி (இன்று) வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.  அமலாக்கத்துறை காவல் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை மேலும் 7 நாட்கள் நீட்டிக்கக் கோரிய அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.  அப்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரடியாக அவரே நீதிமன்றத்தில் சில வாதங்களை முன்வைத்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் வாதத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  1. ஆம் ஆத்மி கட்சி மீது நாடு முழுவதும் களங்கம் சுமத்த முயற்சி நடக்கிறது
  2. மதுபான கொள்கை வழக்கில் எனக்கு எதிராக 4 சாட்சிகளை அமலாக்கத்துறை முன் வைத்துள்ளது.  ஒரு முதலமைச்சரை கைது செய்ய இந்த சாட்சிகள் போதுமானதா?
  3. ரூ.100 கோடி ஊழல் நடந்ததாகக் கூறப்படுகிறது.  ஆனால் ஊழல் செய்து பெற்றதாக கூறப்படும் பணத்திற்கான ஆதாரம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
  4. நான் கைது செய்யப்பட்டதின் பின்னணியில் அரசியல் சதி இருக்கிறது.  இதில் அமலாக்கத்துறைக்கு ஆதரவாக சாட்சி சொல்ல பலர் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
  5. இந்த வழக்கு 2 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில்,  2022-ல் சிபிஐ வழக்கு தாக்கல் செய்த நிலையில்,  அமலாக்கத்துறை தற்போதுதான் இவ்வழக்கை கையில் எடுத்துள்ளது.
  6. மதுபான கொள்கையில் சம்பாதித்த பணம் எங்கே? அமலாக்கத்துறை குற்றம் சாட்டிய ரூ.100 பணம் இல்லையே? உண்மையான மதுபான கொள்கை முறைகேடு ஊழல் அமலாக்கத்துறை விசாரணைக்கு பின்னரே தொடங்கியுள்ளது.
  7. நீங்கள் விரும்பும் வரை என்னை காவலில் வைத்திருக்கலாம்.  விசாரணைக்கு நான் தயார்.
  8. இந்த வழக்கில் அப்ரூவராக மாறியுள்ள சரத் ரெட்டி பாஜகவுக்கு ரூ.55 கோடி நன்கொடையாக கொடுத்துள்ளார்.  இந்த மோசடியில் பணம் கைமாறிய ஆதாரம் என்னிடம் உள்ளது.  கைது செய்யப்பட்ட பின் அவர் பாஜகவுக்கு ரூ.50 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
  9. இந்த வழக்கில் சிபிஐ 31 ஆயிரம் பக்கங்களுக்கும்,  அமலாக்கத்துறை 25 ஆயிரம் பக்கங்களுக்கும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்திருக்கின்றனர்.  இதில் நான் கைதும் செய்யப்பட்டிருக்கிறேன்.  ஆனால் எந்த நீதிமன்றத்திலும் என்னை குற்றவாளி என நிரூபிக்கவில்லை.
  10. இறுதியாக அமலாக்கத்துறையின் நோக்கம் ஆம் ஆத்மியை நசுக்குவதே என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.