பொங்கல் பண்டிகையையொட்டி திருநெல்வேலி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.6000க்கு விற்பனையாகி வருகிறது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையானது, நாளை தமிழகம் முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக, பொங்கல் பண்டிகையில் முக்கிய பங்காற்றும் பொங்கல் பானை, கரும்பு, பச்சரிசி, காய்கறிகள், பூக்கள் உள்ளிட்டவைகளை வாங்க தற்போது முதல் பலர் கடைகளை நோக்கி படையெடுத்து வரும் சூழலில், பொருட்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொங்கல் பண்டிகையையொட்டி திருநெல்வேலி மலர் சந்தையில் மல்லிகைப் பூ கிலோ ரூ.6000க்கும், பிச்சி ரூ.3 ஆயிரம் வரையிலும், செவ்வந்தி 200 ரூபாய், கேந்தி 70 ரூபாய், ரோஜாப்பூ 250 ரூபாய் சம்பங்கி 150 ரூபாய் அரளி 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில்லும் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மல்லிகை கிலோ ரூ.3500 முதல் ரூ.4000 வரையிலும், முல்லை கிலோ ரூ.2500, பிச்சி கிலோ ரூ.2300, பட்டன் ரோஸ் கிலோ ரூ.250க்கும் விற்பனை செய்யப்படுகிறது. திருச்சி காந்தி மார்க்கெட் பூ சந்தையில் மல்லிகைப்பூ கிலோ நேற்று 2200க்கு விற்கபட்டது. இன்று 2500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதேபோல் ஆட்டுச் சந்தை இன்று அதிகாலை முதல் துவங்கியது. ஸ்ரீவைகுண்டம், ஏரல், திருநெல்வேலி, தூத்துக்குடி,தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை விலைக்கு வாங்க வந்திருந்தனர். 10 கிலோ முதல் 12 கிலோ வரை எடையுள்ள வெள்ளாடு ரூ.15000 முதல் 20000 வரை விற்பனை செய்யப்பட்டன. அதிகாலை துவங்கிய இந்த ஆட்டுச் சந்தையில் காலை 10 மணி வரை ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தைப் பொங்கலை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களை கட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.