ஆலங்குளம் அருகே குழாய் உடைப்பை சரிசெய்ய புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், 4 நாட்களாக சாலையில் குடிநீர் பெருக்கெடுத்து ஓடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர்
வழங்குவதற்காக சங்கரன்கோவில் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கப்பட்டு ஆலங்குளம் நெட்டூர் சாலை வழியாக சங்கரன்கோவில் வரை கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், குருவன்கோட்டை தரைப்பாலம் அருகே சங்கரன் கோவிலுக்கு செல்லும் குடிநீர் குழாயில் கடந்த 20 தேதி இரவு உடைப்பு ஏற்பட்டு தற்போது வரை குடிநீர் வெளியேறி வருகிறது. ஆறாக பெருக்கெடுத்த குடிநீர், ஆலங்குளம் நெட்டூர் சாலையில் 24 மணி நேரமும் வீணாகி வருகின்றது. இதனால் லட்சகணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி வருகின்றது. இது குறித்து, அப்பகுதி கிராம மக்கள் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆயினும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், இதுவரை குழாய் உடைப்பை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்து தண்ணீர் வீணாவதை தடுக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







