மன்னார்குடியில் சொகுசு காரில் சென்றவர் தலைக்கவசம் அணியவில்லை என போலீசார் அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராமையா நகரைச் சேர்ந்தவர் பத்ம சுரேஷ். இவர்
திருவாரூரில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். நாள்தோறும் தனது சொகுசு காரில் அவர் மன்னார்குடியில் இருந்து திருவாரூருக்குச் சென்று வந்தார்.
இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் தேதி வழக்கறிஞர் பத்ம சுரேஷ் தலைகவசம் அணியாமல் வாகனம் ஒட்டியதாகவும் இதற்காக வழக்கறிஞர் பத்ம சுரேஷுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நன்னிலம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி இவருக்கு தெரியவந்துள்ளது.
எனவே தன்மீது பொய்யான வழக்குப் பதிவு செய்ததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஈடாக தன் மீது வழக்குப் பதிவு செய்த காவலர் 1 லட்ச ரூபாயை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது வழக்கு தொடரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதே போல் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி வழக்கறிஞர் பத்ம
சுரேஷ். அவரது வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாகவும் அதற்கு அவருக்கு
100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு திருவாரூர்
மாவட்டம் ஆலிவலம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இவருக்குத்
தகவல் வந்துள்ளது.
தனது வாகன பதிவு எண்ணை வேறு யாரேனும் பொருத்தி கொண்டு இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் இயங்குகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என வழக்கறிஞர் பத்ம சுரேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.







