பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை கடிதம் மூலம் பெற உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அதிமுக எம்பி சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவின் இபிஎஸ் அணியினர் தென்னரசையும், ஓபிஎஸ் தரப்பினர் செந்தில் முருகனையும் வேட்பாளராக அறிவித்துள்ளனர். இதனால் இரண்டு தரப்பில் யாருக்கு இரட்டை இலை கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இந்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தங்கள் தரப்பிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு இன்று நடைபெற்றது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடங்கிய பொதுக்குழுவின் முடிவின்படி தீர்மானிக்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பொதுக்குழுவின் வாக்கு அடிப்படையில் அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுக்கலாம் எனக் கூறிய நீதிபதிகள், பொதுக்குழு தேர்ந்தெடுக்கும் வேட்பாளரை தேர்தல் ஆணையத்துக்கு தமிழ்மகன் உசேன் அனுப்ப வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அதனை ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், “பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்றும் நிலுவையில் உள்ளது என்றும் அதன் மீது ஏன் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டது. அதற்கு தேர்தல் ஆணையமும், நீதிமன்றம் சொல்வதை ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டுள்ளது.
அதிமுக இந்த இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இன்றைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் யாருக்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்கிறதோ அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார். இருதரப்பும் கையெழுத்து போடுவது சாத்தியமல்லாதது. தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்தை கடிதம் மூலம் பெறவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.