ஜோஷிமத் போன்று ஜம்மு காஷ்மீரிலும் கட்டிடங்களில் விரிசல்! பீதியில் மக்கள்

உத்தரகண்ட் மாநிலம் ஜோஷிமத் போன்று ஜம்மு-காஷ்மீரிலும் தோடா மாவட்டத்தில் சில கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திற்கு உட்பட்ட ஜோஷிமத், கர்ணபிரயாக் நகரங்களில்…

உத்தரகண்ட் மாநிலம் ஜோஷிமத் போன்று ஜம்மு-காஷ்மீரிலும் தோடா மாவட்டத்தில் சில கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திற்கு உட்பட்ட ஜோஷிமத், கர்ணபிரயாக் நகரங்களில் கோவில், வீடு, குடியிருப்பு, ஹோட்டல் உள்ளிட்ட கட்டிடங்களில் பெரிய அளவில் திடீர், திடீரென விரிசல் ஏற்பட்டது. இரண்டு ஹோட்டல்கள் லேசாக சரிந்த நிலையில் இருந்தன. இதைதொடர்ந்து நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியாக ஜோஷிமத் நகரம் அறிவிக்கப்பட்டது. மேலும் அந்நகரில் உள்ள கட்டடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புதைந்து வருகிறது.

இதையடுத்து அப்பகுதியில் வசித்த சுமார் 4,000 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. அங்குள்ள கள நிலவரத்தை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் மலைப்பகுதியான தோடா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் உள்ள கட்டடங்களில் விரிசல் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த டிசம்பர் மாதம் ஒரு வீட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று வரை 6 கட்டடங்களில் விரிசல் ஏற்பட்ட நிலையில் தற்போது விரிசல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த பகுதி படிப்படியாக மூழ்கி வருகிறது. இதற்கு தீர்வு காண அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

நேற்று இரவு நிலைமை மோசமானது. நள்ளிரவில் மேலும் பத்து வீடுகள் சரிந்தன. மொத்தம் 21 வீடுகள், ஒரு மஸ்ஜித் மற்றும் மதரஸாக்கள் காலி செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து அப்பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய தற்காலிக வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.