மழையில் நனைந்தபடி சாலையோரம் பிளாஸ்டிக் பைக்குள் கிடந்த 75 வயது மூதாட்டியை, காப்பாற்றி ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்த பெண் போலீசார்.
பழனியை அடுத்த புது ஆயக்குடி கிராமத்தில் சுண்ணாம்பு பாறை வீரமாத்திஅம்மன் கோயில் அருகில் 75 வயது மதிக்கதக்க ஆதரவற்ற மூதாட்டி கடந்த சில நாட்களாக சாலையோரத்தில் படுத்துக்கிடந்துள்ளார்.
மாலை நேரத்தில் பெய்துவரும் மழையில் நனைந்தபடி பிளாஸ்டிக் பைக்குள் மூதாட்டி கிடப்பதாக ஆயக்குடி காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமிக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற ஆய்வாளர் முத்துலட்சுமி, காவலர் சுகப்பிரியா ஆகியோர் விசாரணை செய்ததில், ஆதரவற்ற மூதாட்டி வீரம்மாள் என்பவர் சாலை ஓரத்தில் வசித்து வந்ததும், வயது முதுமையால் நடமாட முடியாமல் கொட்டும் மழையில் சாலை ஓரத்தில் கிடந்தது தெரியவந்துள்ளது.
உடனடியாக மூதாட்டியை குளிப்பாட்டி உடைமாற்றி, முடி திருத்தம் செய்து பழனியில் உள்ள ஹோமில் போலீஸார் சேர்த்தனர் . தாயுள்ளத்தோடு பெண் காவல் ஆய்வாளர் மற்றும் பெண் காவலர் நடந்து கொண்டதற்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.







