உடல் உறுப்புக்காக காத்திருப்போர் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உடல் உறுப்புக்காக காத்திருப்போர் எண்ணிக்கையை அடுத்த ஆண்டிற்குள் குறைக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் உறுப்பு தான தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கள்…

உடல் உறுப்புக்காக காத்திருப்போர் எண்ணிக்கையை அடுத்த ஆண்டிற்குள் குறைக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் உறுப்பு தான தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பலர் தாமாக முன்வந்து உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது அதிகரித்துள்ளது என்றார்.

உறுப்பு தானம் வேண்டி காத்திருப்போர் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. உறுப்பு தானம் வேண்டி காத்திருப்போரே இல்லை என்ற நிலை உருவாக வேண்டும்.
ஹிதேந்திரனின் மரணம் தான் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. உறுப்பு தானத்துக்காக தனி ஆணையத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவாக்கினார்.

இப்போதும் ஹிதேந்திரனை நினைத்துப்பார்க்கிறோம். உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 1,559 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை 148 பேர் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியுள்ளனர். இதுவரை சிறுநீரகத்துக்காக 6,386 பேர் காத்திருக்கின்றனர். ஈரலுக்காக 344 பேரும், இதயத்துக்காக 37 பேரும், நுரையீரலுக்காக 51 பேரும், இதயம் மற்றும் நுரையீரலுக்காக 18 பேரும், கணையத்துக்காக 2 பேரும், கைகளுக்காக 23 பேரும் காத்திருக்கின்றனர். அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் உடல் உறுப்புகளுக்காக காத்திருப்போரின் எண்ணிக்கையை முற்றிலும் குறைக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.