எதிர்க்கட்சி துணைதலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வலியுறுத்தி சபாநாயகர் அப்பாவு-உடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்தித்தனர்.
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. சட்டப்பேவை கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரபலமானோரின் மறைவு குறித்து இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
நாளை (11-ம் தேதி) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழிய பெற்று எம்.எல்.ஏ.க்களின் விவாதம் தொடங்கும். 12-ந்தேதி, எம்.எல்.ஏ.க்களின் விவாதம் தொடரும். 13-ந்தேதி, எம்.எல்.ஏ.க்களின் விவாதத்திற்கு முதலமைச்சர் பதில் அளித்து பேசுவார். பின்னர் அவசர சட்டம் தொடர்பான சட்ட மசோதா உள்ளிட்ட சில சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். அவை தினமும் காலை 10 மணிக்கு கூடும். கேள்வி நேரம் உண்டு.
இந்தநிலையில் சபாநாயகர் அப்பாவு உடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்தித்தனர். அப்போது எதிர்க்கட்சி துணைதலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வலியுறுத்தி கடிதம் அளித்தாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, ஆர்.பி.உதயகுமார் செங்கோட்டையன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சபாநாயகருக்கு எதிராக கோஷம் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவை இருக்கை விவகாரம் தொடர்பாக பரிசீலனை செய்வதாக, சபாநாயகர் தெரிவித்துள்ளதாக அதிமுக எம்எல்ஏக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.








