கொரானா வைரஸ் பரவலை தடுப்பதே தமிழக அரசின் தலையாய பணி என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
பாபநாசம் அரசு பொதுமருத்துவமனையில் கொரானா தடுப்பு பணிகள் குறித்து இன்று மாலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார் .அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் சிகிச்சை அளிக்க விவரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:
கொரானா குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இன்னும் அதிகம் வேண்டும். அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரானா தடுப்பு தொடர்பாக அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இரண்டு வாரத்திற்கு பின் செய்ய வேண்டிய பணிகளை தமிழக அரசு முன்கூட்டியே செய்து வருகிறது.
தமிழக அரசின் தற்போதைய தலையாய பணியாக கொரானா தடுப்புப் பணி இருக்கிறது. கொரோனா கட்டுப்படுத்தப் பட்ட பின்பு பிளஸ் 2 தேர்வு கண்டிப்பாக நடைபெறும். இரண்டு நாளுக்கு ஒருமுறை முப்பதாயிரம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு கிடைக்கிறது. செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தை தமிழக அரசு குத்தகைக்கு கேட்டுள்ளது.
அதில் தடுப்பூசி தயாரிக்கும் பணி தொடங்கினால் ஆறு மாதத்தில் இரண்டு கோடி தடுப்பூசிகளும், ஒரு வருடத்திற்கு எட்டு கோடி தடுப்பூசிகள் கிடைக்கும். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
பிறகு கபிஸ்தலம், சுவாமிமலை, அம்மாபேட்டை போன்ற இடங்களில் செயல்படும் அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார் . அவருடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சண்முகம், திருவிடைமருதூர் ராமலிங் கம், சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







