மாநாடு படத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல், நயன்தாரா நடிப்பில் உருவான ‘கோல்ட்’ திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
’வி ஹவுஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான சுரேஷ் காமாட்சி தொடர்ந்த வழக்கில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவான ’மாநாடு’ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட, எஸ்.எஸ்.ஐ தயாரிப்பு நிறுவனத்துடன் ரூ.13 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டதாக குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த தொகையில் ரூ.27 லட்சத்தையும், ஜி.எஸ்.டி. பாக்கி தொகை ஒரு கோடியே 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என மொத்தம் ஒரு கோடியே 31 லட்ச ரூபாயை தரவேண்டிய நிலையில்,
பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ’கோல்ட்’ என்ற மலையாள படத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட எஸ்.எஸ்.ஐ. தயாரிப்பு நிறுவனம் சார்பில் உரிமம் வாங்கியுள்ளதாக தெரிவித்தார். எனவே மாநாடு திரைப்படத்தின் பாக்கியை தராமல் ’கோல்ட்’ படத்தை வெளியிடக் கூடாது. அதற்குத் தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.எஸ்.ஐ. தயாரிப்பு நிறுவனம் தரப்பில், நிலுவையில் உள்ள தொகையை 90 நாட்களில் தவணை முறையில் கொடுப்பதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை முடித்துவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.