மயிலாடுதுறையில் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணை கொடூர ஆயுதங்களுடன்
வலுக்கட்டாயமாக கடத்திய கும்பலை சேர்ந்த மூன்று பேரை மயிலாடுதுறை போலீஸார்
விக்கிரவாண்டி அருகே கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை கஞ்சமேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன்
விக்னேஸ்வரன்(34). இவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள
மயிலம்மன் நகரில் உள்ள தனது பாட்டி பிரேமா வீட்டில் தங்கியிருந்தபோது, அதே
பகுதியைச் சேர்ந்த பட்டதாரி, இளம்பெண் ஒருவரை காதலித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன் பின்னர் விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காமல் அவருடன் பழகுவதை அப்பெண் நிறுத்தியுள்ளார். ஆனால், அதன் பின்னரும் அந்த பெண்ணை விக்னேஸ்வரன்
பின்தொடர்ந்ததோடு, அப்பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி பெண் வீட்டுக்குச் சென்று
தகராறிலும் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து, அப்பெண் வீட்டார் மயிலாடுதுறை
போலீஸில் 2 முறை புகார் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக மயிலாடுதுறை போலீஸார் இருதரப்பினரையும் அழைத்து பேசி இனி அப்பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது என விக்னேஸ்வரனிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்பின்னர் கடந்த ஜூலை 12-ஆம் தேதி அப்பெண்ணை கடத்த முயற்சித்துள்ளார்.
அப்போது அவரிடமிருந்து தப்பித்த இளம்பெண் இதுகுறித்தும் மயிலாடுதுறை போலீஸில்
புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக, வீடுபுகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க
முயற்சித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக மயிலாடுதுறை போலீஸார் வழக்குப்பதிவு
செய்து விக்னேஸ்வரனை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு, ஒரு ஸ்கார்பியோ கார் மற்றும் இருசக்கர வாகனத்தில்
பயங்கர ஆயுதங்களுடன் வந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் சுமார்
15க்கும் மேற்பட்டோர், அப்பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து, வலுக்கட்டாயமாக
கதறகதற தூக்கிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து, தகவலறிந்த மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான போலீஸார் உடனடியாக நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியதோடு, வீட்டில் இருந்த சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி பெண்ணைக் கடத்திய நபர்களை தேடி வந்தனர். கடத்தல் சம்பவத்தையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர்.
காவல்துறையினர் சிசிடிவி கேமரா உதவியுடன் சோதனை செய்து அருகில் உள்ள
மாவட்டங்களை உஷார் படுத்தினர். மயிலாடுதுறையில் கடத்திச் செல்லப்பட்ட இளம்பெண் நான்கு மணி நேரத்தில் விக்கிரவாண்டி அருகே மீட்கப்பட்டார்.
கடத்திச் சென்ற விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் மயிலாடுதுறையை சேர்ந்த
சுபாஷ் சந்திர போஸ், விழுப்புரத்தைச் சேர்ந்த செல்வகுமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.இதில் தொடர்புடைய மற்ற இளைஞர்களை போலீஸா தேடி
வருகின்றனர். இச்சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.