தமிழகத்தில் இரண்டாவது நாளாக திரைத்துறையில் கொடிகட்டி பறக்கும் சினிமா தாயாரிப்பாளர்களின் இல்லங்களில் நடைபெறும் வருமானவரித்துறை ரெய்டில் பெரிய அளவில் ஆவணமோ, பணமோ சிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. திரைப்பட பைனான்சியர் மற்றும் தயாரிப்பாளர் அன்புச் செழியனுக்கு சொந்தமான இடங்களில் மட்டும் ரூ.13 கோடி ரொக்கப்பணம் சிக்கியுள்ளது. மற்றப்படி ஐடித்துறை அதிகாரிகள் எதிர்பார்த்த அளவிற்கு எவ்வித ஆவணமும் சிக்கவில்லை என தெரிகிறது.
கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பாளரும், பிரபல பைனான்சியருமான ஜி.என்.அன்புச்செழியன், தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா, கலைப்புலி தாணு, எஸ்.ஆர். பிரபு என திரைத்துறையை ஆட்டி படைக்கும் நபர்களை குறிவைத்து தமிழகம் முழுவதும் வருமானவரித்துறை சோதனை இரண்டாவது நாளாக நடைபெறுகிறது.
இதுதொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியதாவது, தமிழகத்தில் தயாரிப்பாளர் அன்புச் செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது. இதில் மதுரையில் அன்புச் செழியனுக்கு நெருக்கமான 30 இடங்களிலும், சென்னையில் அவரது அலுவலகம், வீடு மற்றும் அவருக்கு நெருக்கானவர்களின் இல்லங்களிலும் இந்த சோதனை நடைபெறுகிறது.
அதேபோல், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஞானவேல் ராஜா மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அலுவலங்கள் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் இரண்டாவது நாளாக இந்த சோதனை நடைபெறுகிறது என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த திடீர் சோதனை ஏன் என அதிகாரிகளிடம் கேட்டபோது, வருமானவரித்துறையின் ரிசர்ச் விங் பல்வேறு தகவல்களை கடந்த சில மாதங்களாகவே திரட்டியுள்ளனர். அதில் குறிப்பாக அன்புச்செழியன் பல்வேறு படங்களை தயாரிப்பது மட்டுமின்றி, பல தயாரிப்பாளர்களுக்கு பைனான்சியராகவும் உள்ளார். இந்த கொடுக்கல், வாங்கலுக்கு எவ்வித கணக்கு வழக்கு வைத்து கொள்வதில்லை. ஆனால் பாக்ஸ் ஆபிசில் சில குறிப்பிட்ட படங்கள் நல்ல வசூலானது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதுகுறித்த புள்ளி விபரங்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுகிறது.
தயாரிப்பாளர்கள் எவ்வளவு கோடி கேட்டாலும் அவற்றை எவ்வித முறையான ஆவணங்களுமின்றி குறைந்த வட்டிக்கு கொடுப்பது அன்புசெழியனின் வழக்கம். அதேநேரத்தில் வட்டி சரியாக கட்டவில்லை என்றால் அவற்றிக்கு வட்டிக்கு மேல் வட்டிப்போட்டு வசூல் செய்வதாக எங்களுக்கு தகவல் கிடைத்தன.
அதேபோல், மற்ற தயாரிப்பாளர்களான கலைப்புலி தாணு, ஞானவேல் ராஜா, எஸ்.ஆர்.பிரபு ஆகியோரும் பல்வேறு வெற்றி படங்களை கடந்த காலங்களில் தயாரித்துள்ளனர். ஆனால் இவர்கள் அதற்குரிய வருமானவரியை சரி வர செலுத்தவில்லை. இது தொடர்பாக இன்பார்மர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தற்போதைய சோதனை நடைபெற்று வருகிறது என்றனர்.
இந்த வருமானவரித்துறை சோதனையில் ஏதாவது முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளனவா ? என கேட்டதற்கு, சென்னை புரசைவாக்கத்தில் அன்புச் செழியனுக்கு சொந்தமான இடத்தில் மட்டும் ரூ.13 கோடி ரொக்கப்பணம் சிக்கியுள்ளது. மற்ற இடங்களில் தாங்கள் தேடி சென்ற ஆவணங்கள் பெரிய அளவில் சிக்கவில்லை. மேலும், தம்மை தேடி வரும் தயாரிப்பாளர்களுக்கு அன்புச் செழியன் கோடி கணக்கில் ரொக்கப்பணம் கொடுப்பதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த பணமெல்லாம் எங்கு பதுக்கி வைத்து இருக்கிறார் என்ற தகவல்கள் எங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. அதனால்தான் இரண்டாவது நாளாக இந்த சோதனை தொடர்கிறது என்கின்றனர் வருமானவரித்துறை அதிகாரிகள்.
மேலும், கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரபல நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்தவர் அன்புச் செழியன் ஆவார். அந்த படத்தை எடுப்பதற்கு கருப்பு பணம் செலவழிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அப்போது அதிகாரிகள் சோதனை நடத்தி கணக்கில் காட்டதா ரூ.77 கோடியை பறிமுதல் செய்தது குறிப்பிடதக்கது. தற்போதைய சோதனையில் அரசியல் தலைவர்கள் யாராவது சட்டத்திற்கு புறம்பாக சம்பாதித்த பணத்தை முதலீடு செய்துள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இராமானுஜம்.கி











