மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக முதல்வர் சிறப்புத் திட்டத்தில் ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள்
தூர்வாரிய பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் நேற்று
முதல் ஆய்வு செய்து வருகிறார். இன்று நாகையில் ஆய்வு செய்த முதலமைச்சர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடி நேரடி நெல் விதைப்பு முறை, இயந்திர
நடவு முறை மற்றும் தூர்வாரப்பட்ட வாய்க்கால்களை ஆய்வு செய்தார். தரங்கம்பாடி
தாலுக்கா அனந்தமங்கலத்தில் நேரடி நெல் விதைப்பு முறையான ட்ரம்சீடர் முறையில் விதைப்பு செய்யும் பணிகளைப் பார்வையிட்டார். தொடர்ந்து திருக்கடையூரில் முதலமைச்சரின் சிறப்பு திட்டத்தில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார். அங்கு திரண்டிருந்த விவசாயிகள், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பின்னர் நல்லாடை கிராமத்தில் இயந்திர நடவு மூலம் நாற்றுகள் நடவு செய்யும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு விவசாயிகள், பொதுமக்களை சந்தித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 92 ஆயிரத்து 500 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில், பம்புசெட் மூலம் 24 ஆயிரத்து 500
ஏக்கர் சாகுபடி பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் 47 ஆயிரம் ஏக்கர் நடவுக்கு
தயாராக உள்ளததாகவும், மாவட்டத்தில் 3 ஆயிரத்து 500 ஏக்கரில் நேரடி நெல்
விதைப்பு செய்ய திட்டமிடப்பட்டு 356 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு செய்து முடிக்கப்பட்டுள்ளதாகவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 8 கோடியே
70 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பு திட்டத்தின் கீழ் 850 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆறுகள் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆய்வின்போது, அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மெய்யநாதன், கே.என்.நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதாமுருகன், பன்னீர்செல்வம்,
ராஜகுமார், மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள்
உடனிருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளையும், குறுவை சாகுபடி பணிகளையும் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்ததாக திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு செய்ய புறப்பட்டுச் சென்றார். முன்னதாக திருக்கடையூரில் ஆய்வை முடித்துக் கொண்டு அங்கு உள்ள தங்கும் விடுதி ஒன்றில், மயிலாடுதுறையில் மகள் விஜயலட்சுமியை ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வைத்த நகராட்சி மீன் மார்க்கெட்டில் மீன்களை கழுவி சுத்தம் செய்யும் தாயார் ரமணியை வரவழைத்து வாழ்த்து தெரிவித்தார். மீன் மார்க்கெட்டில் கூலிவேலை செய்யும் ரமணி மகளின் படிப்பிற்காக வீடு நகைகளை விற்று மருத்துவ படிப்பு படிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.