வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழாவில் பாதுகாப்பிற்கு சென்ற பெண் காவலர் அருள் வந்து ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குடியாத்தம் பகுதியில் பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் கோயிலின் சிரசு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் திருவிழாவுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழாவை முன்னிட்டு காவல் துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இவ்விழாவில் அசம்பாவிதங்களை தவிர்க்க பாதுகாப்பு பணியில் 2 எஸ்.பி.,க்கள், 5 ஏடிஎஸ்பி-க்கள், 13 டிஎஸ்பிகள் உள்பட 1,700 காவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் கோயில் விழாவிற்கு பாதுகாப்புக்காக வந்த பெண் காவலர் ஒருவருக்கு, அங்கு அடிக்கப்பட்ட உடுக்கை சத்தத்தை கேட்டு அருள் வந்துவிட்டது. உணர்ச்சி வசப்பட்டு ஆடும் அவரை மற்ற போலீசார் பிடிக்க முயன்றனர். இந்த வீடியோ தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.







