தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 15-ம் தேதி முதல் 17ம் தேதி வரை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கல்வி, வேலைக்காக தங்கியிருந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். தொடர்ந்து, பண்டிகை நாட்கள் முடிந்ததை அடுத்து அவர்கள் மீண்டும் திரும்பி வருகின்றனர். இதற்கிடையே, ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இச்சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
https://x.com/NainarBJP/status/2013142334616334374
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
“நேற்று நெல்லையில் இருந்து சென்னை வருவதற்கான ஆம்னி பேருந்தில் ஒரு நபருக்கு ரூ.7,500 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வெளிவந்துள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பொங்கல், தீபாவளி என அனைத்துப் பண்டிகைக் காலங்களிலும், ஆம்னி பேருந்துக் கட்டணம் விண்ணைத் தொடுவதும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதும், கண் துடைப்புக்காக திமுக அமைச்சர்கள் ஆம்னி கட்டண உயர்வை எச்சரிப்பதும் தொடர்கதையாகி வருகிறதே தவிர, மக்களின் பணம் சுரண்டப்படுவது நின்றபாடில்லை.
பண்டிகை தினத்தன்று தன் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டுத் திரும்ப நினைக்கும் ஒரு குடும்பத்தின் மாதச் சம்பளத்தை ஆம்னி பேருந்துக் கட்டணம் மூலம் பறித்துவிட்டு வேடிக்கை பார்க்கும் திமுக அரசை, நடுத்தர வர்க்க மக்களின் வயிற்றெரிச்சலே விரைவில் வீழ்த்தும்!”
இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.







