ஆட்சி முடியும் நேரத்தில் வெற்று அறிவிப்புகளை அடுக்கும் திமுக – நயினார் நாகேந்திரன் விமர்சனம்….!

திமுக அரசானது ஆட்சி முடிவதற்கான Countdown தொடங்கியதும் Countless ஆக வெற்று அறிவிப்புகளை அடுக்குவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்
“நான்கரை ஆண்டுகளாக ஆட்சிக் கட்டிலில் ஒய்யாரமாகத் தூங்கிய திமுக அரசு, புத்தாண்டு தொடங்கியதும் தேர்தல் நெருங்கும் பயத்தில் மாணவர்களுக்கு லேப்டாப், பொங்கலுக்கு ரொக்கப் பணம், அரசுப் பணியாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) என அடுக்கியதை அனைவரும் அறிவர்.
அதிலும் திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 309-ல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவோம் என உறுதியளித்து, நான்கரை ஆண்டுகளாக ஒன்றும் செய்யாமல் ஒப்பேற்றிவிட்டு, கடைசி நேரத்தில் அரசு ஊழியர்களின் வாக்கை அறுவடை செய்ய, மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் மீது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என ஏனோதானோ என ஸ்டிக்கர் ஒட்டி ஏதோ சாதனை போல பாசாங்கு செய்து வருகிறது. இத்திட்டத்தை அறிவித்து ஒரு வார காலம் முடிந்த நிலையில், இன்று வரையில் இது தேர்தலுக்கு முன்னரே அமல்படுத்தப்படுமா இல்லையா எனும் அடிப்படைத் தகவலைக் கூட வழங்காமல் ஃபோட்டோஷூட்டில் மட்டுமே கவனம் செலுத்துவது அரசுப் பணியாளர்கள் நலனில் திமுக அரசு காட்டும் அக்கறையை வெளிப்படுத்துகிறது.
அடுத்த 70 நாட்களில், இதைப்போல இன்னும் எத்தனை வெற்று அறிவிப்புகளை வேண்டுமானாலும் வெளியிட்டு விளம்பரப்படுத்திக் கொள்ளட்டும்! ஒற்றை சீட்டை இழுத்ததும் சீட்டுக்கட்டு மாளிகை மொத்தமாக சரிவது போல, ஏமாற்ற விளம்பரத் திட்டங்களை வெளியிடும் திமுக அரசின் கோட்டையைப் பிடிக்கும் கனவும் மக்களின் வாக்குச்சீட்டினால் ஒட்டுமொத்தமாகச் சரியும்” என்று தெரிவித்துள்ளார். 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.