திருப்பரங்குன்றம் விவகாரம் ; இரட்டைவேடம் போடும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்…!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசானது இரட்டை வேடம் போடுவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

”மதச்சார்பின்மை என்னும் திமுக அரசின் இரட்டைவேடத்திற்கான காலக்கெடு தொடங்கிவிட்டது!. கந்தர் மலையில் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி மறுத்துவிட்டு, சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடத்த மட்டும் அனுமதித்துள்ள திமுக அரசைக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்துள்ளனர் திருப்பரங்குன்றம் மக்கள்.

நீதிமன்றமே தீபத்தூணில் தீபமேற்றுமாறு உத்தரவிட்ட பின்பும், இந்துக்களின் வழிபாட்டு உரிமையைப் பறித்துவிட்டு, சந்தனக்கூடு திருவிழாவிற்கு மட்டும் முழு ஆர்வத்துடன் அனுமதித்தது திமுக அரசின் மதச்சார்பின்மையைத் தெளிவாக வெளிப்படுத்தியது. அதிலும், “சட்டம் ஒழுங்கு சீர்கெடும்” என வெற்று சாக்குச் சொல்லி, பால், தண்ணீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களைக்கூட மலைமீது அனுமதிக்காமல் திருப்பரங்குன்றம் மக்களை வதைத்துவிட்டு, இன்று தர்காவில் கொடி ஏற்றுவதற்கு மட்டும் அனைவரையும் அனுமதிப்பது தான் திமுக அரசின் சமத்துவமா?

மதச்சார்பின்மை நாடகமாடி, தீபாவளி பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து கூறாததில் தொடங்கி திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றுவதற்கு அனுமதி வழங்காதது வரை அப்பட்டமாக இந்து வெறுப்பைக் கக்கும் திமுக அரசுக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக, எதிர்குரல் கொடுத்த திருப்பரங்குன்றம் மக்களின் கேள்விகள் வெறும் தொடக்கப்புள்ளியே. போலி மதச்சார்பின்மைவாத குள்ளநரி திமுக அரசை ஆட்சிக் கட்டிலில் இருந்து தமிழக மக்கள் விரட்டியடிக்கும் நாள் வெகுதூரமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.