ஏற்கனவே அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்ட திட்டத்துக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி ‘நம்ம ஸ்கூல்’ என்ற பெயரில் மீண்டும் துவங்கியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : “எனது தலைமையிலான அதிமுக அரசில் துவக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு, புதிதாக பெயிண்ட் அடித்து ஸ்டிக்கர் ஒட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளது இந்த திமுக அரசு. கடந்த 19.12.2022 அன்று அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறையில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட சி.எஸ்.ஆர். எனப்படும் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி திட்டத்திற்கு தங்கிலீஷில் “நம்ம ஸ்கூல்’’ என்று நாமகரணம் சூட்டி இன்றைய முதலமைச்சர் மீண்டும் அதை துவக்கி வைத்திருக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 23.5.2017 அன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன், அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தி இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரம் வரை சுமார் 82 கோடி ரூபாய் சி.எஸ்.ஆர். நிதியாக வரப்பெற்றது. இந்திய நிறுவனச் சட்டம் 2019-ன் படி, பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அவற்றின் லாபத்தில் இரண்டு விழுக்காட்டுத் தொகையினை சமூகப் பொறுப்புச் செயல்பாடுகளில் பயன்படுத்த வேண்டும் என்று முறை வகுக்கப்பட்டது.
அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு உதவி செய்யும் ஆர்வத்துடன் இருந்த தொழில் நிறுவனங்களுக்கும், ஆர்வலர்களுக்கும், முன்னாள் பள்ளி மாணவர்களுக்கும் எளிய, நம்பகத்தன்மை கொண்ட இணைய வழித்தடமும் ஏற்படுத்தும் விதமாக, நான் 5.11.2019 அன்று தலைமைச் செயலகத்தில், இணையவழி நிதி திரட்டும் இணையதளத்தை எளிமையாக துவக்கி வைத்தேன். இணையவழியில் திரட்டப்படும் நிதியானது, அதற்கென தொடங்கப்பட்டுள்ள தனி வங்கிக் கணக்கில் பெறப்படுவதுடன், அந்த நிதி தொடர்பான விவரங்களை பொதுமக்கள் இணையவழியில் நேரடியாக அறிந்துகொள்ளும் வசதியும் செய்யப்பட்டது.
இவ்வாறு திரட்டப்படும் நிதிக்கு தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் தொடர்பு அலுவலகமாகச் செயல்படும் என்றும், அக்கழகத்தின் பொருளாளரும், செயலாளரும் தொடர்பு அலுவலர்களாக இருந்து நிதி மேலாண்மை செய்வார்கள் என்றும், அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக மக்களுக்கு நன்மைகளை வழங்கிய பல நல்ல திட்டங்களுக்கு மூடுவிழா செய்வதில் குறியாக இருந்த திமுக அரசு, வெற்றிகரமாக செயல்பட்டு வந்த இந்த திட்டத்திற்கும், இத்திட்டத்திற்காக தனியாக துவக்கப்பட்ட இணையதளத்திற்கும் மூடுவிழா நடத்தியது.
எனினும் தொழிலதிபர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு
நன்கொடை வழங்க தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளை அணுகத்
தொடங்கியதன் அடிப்படையில், அதிமுக அரசு கொண்டு வந்த இத்திட்டத்திற்கு
தங்களுடைய ஸ்டிக்கரை ஒட்டி, “நம்ம ஸ்கூல்’’ என்று தங்கிலீஷில் பெயரை வைத்து, மீண்டும் துவக்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்பாடு செய்ய நிதி வசூலிக்கும் இத்திட்டத்தை பெயர் மாற்றம் செய்து, நட்சத்திர ஓட்டலில் நடத்தப்பட்ட தொடக்க விழா நிகழ்ச்சிக்கு சுமார் 3 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாக நேற்றைய நாளிதழ்களில் செய்தி வெளிவந்துள்ளது. அரசின் நிதி நிலைமை தள்ளாட்டத்தில் உள்ளது என்று கூறும் இந்த அரசு, மூன்று கோடி ரூபாயை வீணடித்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது ஏன்? சொல் ஒன்று, செயல் ஒன்று என்று செயல்படும் இந்த அரசு, மக்களுக்கு பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்”. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.