தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர், தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறுவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால், சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், 90 சதவிகிதம் பேர் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்இருக்கையில் அமர்ந்து செல்வோரில், 10 சதவிகிதத்தினர் மட்டுமே ஹெல்மெட் அணிந்து செல்வதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். கிராமங்கள் மற்றும் அதை ஒட்டியுள்ள, சிறு நகர பகுதிகளில், தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பொதுமக்கள் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றால் அபராதம் விதிக்கும் போலீசாரே தலைக்கவசம் அணிவதில்லை என தெரிய வந்துள்ளது. இதையடுத்து தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.
தலைக்கவசம் அணியாமல் பணிக்கு வரும் போலீசாரிடம் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், தலைக்கவசம் வாங்கி வந்து காண்பித்த பின்னரே, வாகனத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். மேலும் வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து மற்றும் சட்டம் – ஒழுங்கு போலீசாருக்கு, மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், ‘போலீஸ்’ என்ற அடையாளத்தை காரணமாக கூறி, வாக்குவாதம் செய்வோர் மீது, வழக்கு பதிந்து, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.