தஞ்சாவூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சென்னை செல்வதற்காக திருச்சி வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, டிஎன்பிஎஸ்சி தேர்வை சரியான முறையில் நடத்த முடியாமல் நிர்வாக திறனற்ற அரசாக திமுக அரசு உள்ளது.
சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி இன்னும் நியமிக்கவில்லை. உச்சநீதிமன்றம் உத்தரவுக்கு பின் கூட அதை நியமிக்க முடியாத அரசாக தான் திமுக அரசு உள்ளது. மாநில அரசுக்கு மத்திய அரசு உரிய நிதி ஒதுக்கவில்லை என மத்திய அரசை முதலமைச்சர் குற்றம் சாட்டுகிறார். மத்திய அரசு திட்டங்களை தான் கொடுக்க முடியும். மத்திய அரசை சரியாக மாநில அரசு அணுகாததால் பல திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. மத்தியில் கூட்டணியில் இருந்த போதே உரிய திட்டங்களும், நிதியும் திமுக அரசால் பெற முடியவில்லை.
மெட்ரோ திட்டத்திற்கு சரியான திட்ட அறிக்கையை அனுப்பாததால் தான் அந்த திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இது திமுக அரசின் அலட்சியத்தை தான் காட்டுகிறது. இந்தியா கூட்டணி பெயரை தொடர்ந்து உச்சரித்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்பொழுது இந்தியா கூட்டணியின் பெயரையே கூறுவதில்லை. அதற்கு காரணம் திமுக – காங்கிரஸ் இடையே உட்கட்சி பூசல் வந்துள்ளது.
திமுக – காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு வந்து கூட்டணியில் விரிசல் வந்துள்ளது. அதிமுக கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம். கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக இன்னும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
குழந்தை அழுதால் மிட்டாய் கொடுப்பது போல பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திய போது உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் என்கிற ஒரு அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். தேர்தல் நெருங்க, நெருங்க தான் கூட்டணி முழுமை பெறும்.
திமுக தினம், தினம் ஒவ்வொரு பெயரில் அறிவிப்பு வெளியிடுகிறார்கள். திமுகவை ஊடகங்கள் தாங்கி பிடிப்பதால் தான் அவர்கள் சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறார்கள்.
இடைக்கால பட்ஜெட்டில் எந்த புதிய அறிவிப்பும் வருவதற்கு வாய்ப்பில்லை. ஒவ்வொரு அரசும் உங்களுடைய ஆட்சி முடியும் தருவாய் இடைக்கால பட்ஜெட் போடுவார்கள். தவெக தலைவர் விஜய் ஊழல்வாதி என்பதற்கு அவர் வரி ஏய்ப்பு செய்ததே சாட்சி. நீதிமன்றமே அதை தன் தீர்ப்பில் கூறியுள்ளது. கட்சி ஆரம்பித்த பின்பு எங்கும் வெளியில் வருவதில்லை. அதுவும் கரூர் சம்பவம் நடைபெற்ற பின்பு 72 நாட்கள் அவர் வெளியே வரவில்லை. எந்த அரசியல் தலைவர்களும் அப்படி இருக்க மாட்டார்கள். அதிமுகவில் உழைப்பவர்களுக்கு நிச்சயமாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்.
இந்தியை கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியுடன் தான் திமுக கூட்டணியில் இருக்கிறது. காலத்திற்கு ஏற்ப நடிக்கக்கூடிய கட்சி தான் திமுக. திமுக தேர்தல் வாக்குறுதியில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை. முக்கியமான அறிவிப்புகள் எதையும் நிறைவேற்றவில்லை. நான் இதுவரை 181 தொகுதிகளில் பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளேன். செங்கோட்டையன் செல்லாத நோட்டு போல், அவரை பற்றி பேசி எந்த பயனும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.







