கோவையில் காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறசென்ற காதலனை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் மயிலாடும்பாறை பகுதியைச் சேர்ந்த மகாதேவன் என்பவரது மகளை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இவர்களது பெற்றோர் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறியிருந்தனர்.
இந்த நிலையில், நேற்று இரவு பிரசாந்த் தனது நண்பருடன், காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக குடிபோதையில் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட வாய் தகராறில் பிரசாந்தை மகாதேவன் மற்றும் அவரது உறவினர் விக்னேஷ் ஆகியோர் வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மகாதேவன் மற்றும் அவரது உறவினர் விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








