திறமையற்றவர்களை அமைச்சர்களாக தேர்வு செய்வதில் நரேந்திர மோடி உலகப் புகழ் பெற்றவர் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா ரயில் நிலைய பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்த முதல் கட்ட விசாரணையின் படி, ரயில்வே சிக்னல் பிரிவு தலைமை இயக்குநா் சந்தீப் மாத்தூா், ரயில்வே செயல்பாடுகள் துறை அதிகாரி ஜெயா வா்மா சின்ஹா ஆகியோர் ”தவறான சிக்னல் வழங்கப்பட்டதன் காரணமாக இந்த ரயில் விபத்துக்கு காரணம்” என தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த விபத்திற்குப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடனடியாக பதவி விலக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் பலியாகியும் இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை, யாரிடமும் உரிய பதில் இல்லை. இத்தகைய மோசமான விபத்திற்கு பொறுப்பேற்காமல் மத்திய அரசு எங்கும் ஓடிவிட முடியாது. ரயில்வே அமைச்சர் விபத்துக்கு பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும்” என பதிவிட்டிருந்தார். இதே போல், ஒடிசா விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஹவுரா விரைவு ரயில் மெதுவான ரயிலுக்கான தடத்தில் தான் வந்துள்ளது. எனவே ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடனடியாக பதவி விலக வேண்டும். திறமையற்றவர்களை அமைச்சர்களாக தேர்வு செய்வதில் நரேந்திர மோடி உலகப் புகழ் பெற்றவர். அதற்கான விலையை அவர் தற்போது கொடுத்து வருகிறார்” என பதிவிட்டுள்ளார்.







