“இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான இணைப்பு ரத்தத்தால் எழுதப்பட்டது” – பிரதமர் நரேந்திர மோடி!

இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான இணைப்பு ரத்தத்தாலும் தியாகத்தாலும் எழுதப்பட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். அப்போது அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு சிறப்பு விருந்தினராகச் உரையாற்றினார். இதனால் அங்கு இந்திய தேசிய கொடியின் மூவர்ணங்களில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் படைகளின் கொடூரத் தாக்குதலில் கொல்லப்பட்ட அனைவரின் குடும்பத்திற்கும் இந்திய மக்களின் இரங்கல் செய்தியை கொண்டு வந்துள்ளேன். நாங்கள் உங்கள் வலியை உணர்கிறோம். பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதிப்பாட்டில் இஸ்ரேலுடன் இந்தியா இன்றும் என்றும் துணை நிற்கும். பயங்கரவாதத்தை எந்தவொரு காரணமும் நியாயப்படுத்த முடியாது.

இந்தியாவிற்கும், இஸ்ரேலுக்குமான உறவு வெறும் அரசியல் சார்ந்தது மட்டுமல்ல, அது ஆழமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது என்பதை பிரதமர் உறுதிப்படத் தெரிவித்தார். இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இணைப்பு ரத்தத்தாலும் தியாகத்தாலும் எழுதப்பட்டது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு, முதலாம் உலகப் போரின்போது ஹைஃபா நகரத்தை விடுவிப்பதற்காக இந்திய வீரர்கள் உயிர் தியாகம் செய்ததை அவர் நினைவு கூர்ந்தார். அந்தத் தியாகமே இன்று இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவிற்கு அடித்தளமாக உள்ளது என்றார்.

இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் யூத சமூகத்தைப் பற்றிப் பேசிய பிரதமர், இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் இந்திய யூதர்கள் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. இந்தியாவில் யூதர்கள் ஒருபோதும் பாகுபாட்டையோ அல்லது துன்புறுத்தலையோ சந்தித்ததில்லை என்பது எங்களது பெருமை என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.