மாநிலங்களவை எம்.பி தேர்தல் – வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்!

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது.

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்.பி. பதவி இடங்கள் வரும் ஏப்ரல் மாதம் காலியாகின்றன. தமிழ்நாட்டில் தம்பிதுரை, ஜி.கே. வாசன், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி. செல்வராசு ஆகிய 6 பேரின் எம்.பி. பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த 37 இடங்களை நிரப்புவதற்கான தேர்தலை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இன்று முதல் மார்ச் 5ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 5ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 9ம் தேதி கடைசி நாளாகும். தேவைப்பட்டால் மார்ச் 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுக சார்பில் 4 எம்.பி.க்களையும், அதிமுக சார்பில் 2 எம்.பிக்களையும் போட்டியின்றி தேர்வு செய்ய முடியும். இதற்கிடையே, அரசியல் கட்சிகள் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஓரிரு நாட்களில் வேட்பாளர்களை அறிவிக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், மாநிலங்களவை சீட் விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுக்கலாம் என்பதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.