கொடைக்கானலில் சாலை விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து காவலரின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே மாவுத்தன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் போக்குவரத்து காவலர் பாலசுப்பிரமணி. இந்நிலையில் கொடைக்கானலில் பணியின் போது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பாலசுப்பிரமணி விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் காவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
காவலர் பாலசுப்ரமணியின் உடல், உடல் கூராய்விற்கு பிறகு அவர் சொந்த ஊரான மாவூத்தன்பட்டிக்கு அடக்கம் செய்வதற்காக கொண்டு வரப்பட்டது. அப்போது ஆம்புலன்ஸில் இருந்து இறக்கப்பட்ட அவரது உடலை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், கூடுதல் கண்காணிப்பாளர் லாவண்யா, இன்ஸ்பெக்டர் சண்முகலெட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் எரியூட்டும் இடம் வரை சுமந்து சென்றனர். இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாலசுப்ரமணி உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது.








