அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியில் பட்டப்பகலில் பள்ளி மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவது போல ஊடகங்களில் வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் எந்தளவுக்கு வேரூன்றியிருக்கிறது என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
எந்தவித தடையுமின்றி சுலபமாகவும், சுதந்திரமாகவும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சர்வ சாதாரணமாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பார்க்கும் போது, தமிழக அரசு அறிவித்தது போதைப் பொருள் தடுப்பு படையா? அல்லது போதைப் பொருளைத் தடுக்க முடியாத படையா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலேயே நடைபெறும் போதைப் பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்துவதில் அரசு நிர்வாகம் துரித நடவடிக்கை எடுப்பதோடு பள்ளி சென்று கல்வி பயில வேண்டிய மாணவர்கள் போதைக்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தை இழக்கும் அபாயகரமான நிலையை தடுத்து நிறுத்த வேண்டும்.
எனவே, தமிழகத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதுடன், அறிவித்த நாள் முதல் காகித அளவிலேயே இருக்கும் போதைப் பொருள் தடுப்பு படையை முழு செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




