நடிகர் விஜய் சேதுபதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் போதைப்பொருளுக்கு எதிரான ‘ஒரு கோடி கையெழுத்து’ இயக்கத்தில் கையெழுத்திட்டு ஆதரவினை தெரிவித்துள்ளார்.
போதையற்ற தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து பெறும் பிரச்சார இயக்கத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடந்த 12ம் தேதி தொடங்கியது. இந்த இயக்கத்தை விடுதலைப் போராட்ட வீரரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான சங்கரய்யா தொடங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாட்டில் சமீப காலமாக போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. அதிகளவில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மலிவாக கிடைக்கிறது. தமிழ்நாடு காவல்துறை கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருளை தடுக்கவும், விற்பனை செய்வோரை தனிப்படை அமைத்து பிடிக்கவும் தீவிரம் காட்டி வருகிறது.
இதனையும் படியுங்கள் : கர்நாடக பட்ஜெட்டில் மேகேதாட்டு அணை: வைகோ கண்டனம்
தமிழ்நாடு அரசின் சார்பாக நடத்தப்படும் மதுபான கடைகளை மூட வலியுறுத்தி பல இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் அதிகரிப்பால் பல இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது மற்றும் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், போதைப் பழக்கத்திலிருந்து இளைஞர்களை பாதுகாக்கவும், ஆரோக்கியமான சமூகத்தை கட்டமைக்கவும் வலியிறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒரு கோடி கையெழுத்து பெறும் பிரச்சார இயக்கத்தை தொடங்கியது. இந்த நிகழ்வில் சினிமா, அரசியல் மற்றும் பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். இதன் அடிப்படையில் சில தினங்களுக்கு முன்பு நடிகரும் , மக்கள் நீதி மன்றத்தின் தலைவருமான கமல்ஹாசனை இந்திய வாலிபர் சங்கத்தினர் சந்தித்தனர்.
இதன் தொடர்ச்சியாக தமிழ் திரைப்படங்களில் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள நடிகர் விஜய் சேதுபதியை இந்திய வாலிபர் சங்கத்தினர் சந்தித்து போதை பொருளுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு ஆதரவு திரட்டினர். அப்போது நடிகர் விஜய் சேதுபதி போதைப் பொருளுக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து பெரும் நிகழ்வில் தானும் கையெழுத்திட்டு ஆதரவு வழங்கினார்.
–யாழன்