தமிழ்நாட்டை கஞ்சா போதையில் தள்ளாட வைத்திருப்பதே திராவிட மாடல் ஆட்சியின் சாதனை – சீமான் விமர்சனம்….!

தமிழ்நாட்டை கஞ்சா போதையில் தள்ளாட வைத்திருப்பதே திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் ;

“திருவள்ளூர் அருகே ஒண்டிக்குப்பம் பகுதியில் நான்கு பேர் கொண்ட கஞ்சா போதை கும்பல், இருவரை அடித்துக் கொன்ற கொடூர நிகழ்வின் சுவடு மறைவதற்குள், சென்னை வேளச்சேரியில் உணவு வழங்கும் இளைஞரை கஞ்சா போதையில் 3 பேர் கும்பல் அரிவாளால் வெட்டும் காணொளி இதயத்தை உறையச் செய்கிறது.

கட்டுக்கடங்காத போதைப்பொருள் புழக்கத்தால் தமிழ்நாட்டில் நாள் தோறும் நடைபெறும் வன்முறை வெறியாட்டங்கள் நாம் நாகரீகம் அடைந்த நாட்டில்தான் வாழ்கின்றோமா? என்ற ஐயத்தை ஏற்படுத்தும் அளவிற்கு திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதை விற்பனையின் உச்சத்தை எட்டியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் கிலோ கணக்கில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதும், அதனால் அதிகளவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகின்றனர் என்பதும் மிகுந்த கவலையையும், வேதனையையும் அளிக்கிறது.

தமிழ்நாட்டிலுள்ள பெருநகரங்கள் முதல் சிறு கிராமங்கள் வரை கஞ்சா உள்ளிட்ட விற்பனை கட்டுக்கடங்காது அதிகரித்துள்ளது. ஏற்கனவே, மதுபானங்களை அரசே விற்பதன் மூலம் தமிழகக் குடும்பங்களைச் சீரழித்தது போதாதென்று, தற்போது போதைப்பொருட்களின் பயன்பாட்டினை கட்டுப்படுத்தத் தவறி, வளரிளம் தலைமுறைகளின் எதிர்காலத்தையே திமுக அரசு அழித்தொழிக்கிறது. அதுமட்டுமின்றி, அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாட்டால் கொலை, கொள்ளை, வழிப்பறி, கூட்டுப் பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட கொடுங்குற்ற நிகழ்வுகளும் பெருமளவு அதிகரித்து தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முற்றுமுழுதாகச் சீரழியவும் காரணமாகியுள்ளது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு போதைப்பொருள் புழக்கத்தால் நடைபெறும் வன்முறைகளில் இந்தியாவிலயே தமிழ்நாடு முதலிடம் பெறும் அளவிற்கு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. பல இலட்சம் கிலோ போதைப்பொருள் விற்பனை, பல்லாயிரக்கணக்கில் போதைப்பொருள் குற்ற வழக்குகள் என்பதே 5 ஆண்டு கால திமுக அரசின் சாதனையாகும்.

கடந்த காலங்களில் பெருநகரங்களில் மிக மிக ரகசியமாக மட்டுமே கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு என்றிருந்த நிலை மாறி, தற்போது தமிழ்நாட்டின் சிறிய கிராமங்களில்கூட மிக சாதாரணமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவது தமிழிளந்தலைமுறையினரின் எதிர்காலம் குறித்த மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது.

அண்டை மாநிலங்களிலிருந்து நாள்தோறும் தமிழ்நாட்டிற்குள் கஞ்சா பொட்டலங்கள் மொத்தமாக கடத்தப்படும் நிலையில், அதனைத் தடுக்க திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? கட்டுக்கடங்காத போதைப்பொருள் விற்பனையை தடுக்க முடியாதது அதன் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது.

தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்துவோர், கடத்துவோர், பதுக்குவோர், விற்போர் மீது மட்டுமே அவ்வப்போது கண்துடைப்பிற்காக நடவடிக்கை எடுக்கப்படுகிறதே தவிர, போதைப்பொருள் உற்பத்தி முதலாளிகள் மீது தமிழ்நாடு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால்தான் தமிழ்நாட்டில் இன்றுவரை போதைப்பொருள் பயன்பாட்டினை முழுமையாக ஒழிக்க முடியவில்லை.

மேலும், போதைப்பொருள் குற்றங்களைத் தடுக்கும் ‘போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு காவலர்கள் பிரிவில் நிலவும் ஆட்கள் பற்றாக்குறையும் தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனையை முழுவதுமாகத் தடுக்க முடியாததற்கு மற்றுமொரு முக்கியக் காரணமாகும். ஒவ்வொரு ஊரிலும் அரசே மதுக்கடைகளை திறந்து வைத்து மக்களை குடிக்க வைத்துவிட்டு, போதைப்பொருளை ஒழிப்போம் என்று திராவிட மாடல் அரசு பேசுவது வெட்கக்கேடானது.

ஆகவே, போதையின் பாதையில் இளைஞர்கள் செல்ல வேண்டாம் என்று காணொளி வெளியிடுவதாலோ, ஆண்டுக்கு ஒரு முறை போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பதாலோ மட்டும் போதைப்பொருள் ஒழிந்துவிடாது என்பதை இனியேனும் உணர்ந்து, காவல்துறையைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள், சீரழிந்து வரும் தமிழ் இளந்தலைமுறையினரின் எதிர்காலத்தைப் பாதுகாக்க தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை முழுவதுமாக ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.