2023-2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
2023-2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இதையும் படிக்கவும்: எந்த பயமும், தயக்கமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளுங்கள்- மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற்றது. இந்த நேரத்தில், மொத்தம் 10 அமர்வுகள் நடைபெற்றன. முதல் அமர்வின் போது, குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் 2023-24 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றது.
இந்நிலையில், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மானியங்களுக்கான கோரிக்கைகளை துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் ஆய்வு செய்த ஒரு மாத கால இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் அமர்வு நாளை (மார்ச் 13ம் தேதி) தொடங்குகிறது. இந்த இரண்டாவது அமர்வு மொத்தம் 17 அமர்வுகளை கொண்டிருக்கும். இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 6ம் தேதி வரை நடைபெறும்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்விற்கு முன்னதாக, மாநிலங்களவை தலைவரான ஜகதீப் தங்கர் சபையின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.







