வேலூரில் இன்று தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் – 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி!

தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தையொட்டி, அப்பகுதியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டம், அகரம்சேரியில் இன்று தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் 4,900 போ் கலந்து கொள்ள உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் க்யூ.ஆா்.கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கூட்டம் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், காவல் துறை அறிவுறுத்தலின்பேரில், கூட்டம் நடைபெறும் இடத்தில் 140 அடி அகலம், 600 அடி நீளம் என்று மொத்தம் 84 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில், 36 அடி உயரத்தில் மேற்கூரையும், கேலரிகளுடன் 4,900 போ் அமரும் வகையில் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர தவெக சார்பில் 1,000 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. விஜய்யை பார்க்க ஏராளமான தொண்டர்கள், ரசிகர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட காவல்துறை சார்பில் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், பெண்கள், கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாதவர்கள் இந்நிகழ்ச்சிக்கு வர வேண்டாம், வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் இந்நிகழ்ச்சியை நேரலையாகக் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.