விழுப்புரம் – மயிலாடுதுறை – தஞ்சாவூா் ஆகிய இடங்களை இணைக்கும் இரட்டை ரயில் பாதைக்கான முதற்கட்ட ஆய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.
ஜூலை 20-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக்கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம், மத்திய அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தநிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் மணிப்பூரில் இரண்டு பழங்குடியினப் பெண்களை நூற்றுக்கணக்கான ஆண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மணிப்பூர் வீடியோ தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனால் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய கூட்டத்தொடரில் இதுவரை எந்த ஒரு முக்கியமான அலுவலும் நடத்த இயலாமல் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.
இற்கிடையில், வழக்கம்போல நாடாளுமன்றம் கூடியதும் மக்களவையில் கேள்வி நேரத்தின் போது மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் எஸ். ராமலிங்கம், விழுப்புரம் – தஞ்சாவூா் இரட்டை ரயில் பாதை திட்டம் தாமதம் குறித்தும், திருச்சி ரயில்வே கோட்டத்தில் கரோனா நோய்த் தொற்றை முன்னிட்டு மாற்றப்பட்ட சிறப்பு விரைவு ரயில்களை மீண்டும் சாதாரண ரயில்களாக மாற்றப்படுவது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருந்தாா்.
இதற்கு பதிலளித்து மக்களவையில் பேசிய மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருப்பதாவது: விழுப்புரம் – மயிலாடுதுறை – தஞ்சாவூா் ஆகிய நகரங்களுக்கு இடைப்பட்ட 193 கி.மீ. தூர இரட்டை ரயில்பாதைக்கு முதற்கட்ட ஆய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கள ஆய்வு முடிந்து, தற்போது ஆய்வறிக்கை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 2020, மாா்ச் 23 ஆம் தேதி முதல் அனைத்து வழக்கமான பயணிகள் இயக்கமும் இந்திய ரயில்வே நிறுத்தியது. சிறப்பு ரயில் சேவைகள் மட்டுமே இயக்கப்பட்டன. 2021 – ஆம் ஆண்டு நவம்பா் முதல், மெயில், எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் வழக்கமான கால அட்டவணையுடன் இயக்கப்படுகின்றன.
மற்ற பயணிகள் சேவைகள் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. வந்தே பாரத் ரயில்கள் உள்ளிட்ட ரயில்களை அறிமுகப்படுத்துவது என்பது அதற்கான சாத்தியக்கூறு, வளங்களின் உள்ளிட்ட செயல்முறைக்கு உள்பட்டதாகும் என அதில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
- பி.ஜேம்ஸ் லிசா