தென்காசி அருகே சொத்திற்கு ஆசைப்பட்டு பெற்ற தாயை காரை ஏற்றி கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரது தம்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன், இவரது மனைவி முருகம்மாள் (67).இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சங்கரநாராயணன் இலத்தூர் பகுதியில் நடந்த ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு தென்காசி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பான விசாரணையில் ஆஜராவதற்காக முருகம்மாள் மற்றும் அவரது இளைய மகன் உதயமூர்த்தியும் இருசக்கர வாகனத்தில் தென்காசிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் முருகம்மாள் மற்றும் உதயமூர்த்தி இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.இதில் சம்பவ இடத்திலேயே முருகம்மாள் உயிரிழந்தார்.படுகாயம் அடைந்த உதயமூர்த்தியை அக்கம்பக்கதினர் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அறிந்த காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதற்கட்ட விசாரணையில் இது விபத்து அல்ல திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கொலை எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முருகம்மாளுக்கும் அவரது மூத்த மகன் மோகன் என்பவருக்கும் இடையே நீண்ட காலமாக சொத்துப் பிரச்னை உள்ளதாகவும், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதும் தெரியவந்துள்ளது.மேலும் சங்கரநாராயணன் இறந்த வழக்கில் கிடைத்த நஷ்டஈடு தொகையை முருகம்மாளிடம் மோகன் கேட்டதாகவும், அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததோடு சொத்தில் பங்கு கிடையாது என மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரத்தில் மோகன் அவரை கொலை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து மோகன் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் யார்?யார்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மோகனை போலீசார் தேடி வருகின்றனர்.சொத்திற்கு ஆசைப்பட்டு பெற்ற மகனே தாயை கொலை செய்துள்ள சம்பவம் தென்காசியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
—-வேந்தன்