கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடத்துவது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழ்நாட்டிலுள்ள கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும், தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு இது மீண்டும் வலுப்பெறத் துவங்கியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் விவகாரம் குறித்து 100 நாட்களில் நல்ல பதிலை அளிப்பார் எனவும், தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு துறையின் ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் ஜூன் 12ம் தேதி காலை 10 மணிக்கு அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அனைத்து அதிகாரிகளும் தவறாது கலந்துகொள்ள வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது, அறங்காவலர் நியமனம், மாவட்ட வாரியாக குழுக்கள் அமைத்தல், ஒதுவார் காலிப்பணியிடங்கள், யானைகளை பராமரித்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக தமது கோயில்களின் விவரங்களும் அதிகாரிகள் வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







