தெலங்கானாவில் கொரோனா பாதித்த இளைஞர் ஒருவர், வீட்டில் உரிய வசதி இல்லாததால் மரத்தின் மீது கட்டில் கட்டி, தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
தெலுங்கானாவின் நலகொண்டா அருகே கொத்தானிகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் சிவா (18).
அவருக்கு கடந்த வாரம், கொரோனா தொற்று இருப்பது, பரிசோதனை மூலம் தெரியவந்தது. இதையடுத்து தனிமைப்படுத்திக் கொள்ள, அரசு மருத்துவமனைகளில் இடம் கிடைக்காததாலும், தனியார் மருத்துவமனைக்கு செல்ல வசதி இல்லாததாலும், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு செய்தார்.
ஒரு அறை மட்டும் கொண்ட சிறிய வீட்டில் குடும்பத்தினர் 4 பேர் வசிக்கும் நிலையில், அது சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து வீட்டுக்கு அருகேயுள்ள மரத்தின் மீதேறி, தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி, மரத்தின் மீது கட்டில் கட்டி, சிவா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவருக்கு தேவையான உணவு மற்றும் மருந்தை, கயிற்றின் மூலம் அவரது குடும்பத்தினர் வழங்கி வருகின்றனர். கடந்த 11 நாட்களாக அவர் இப்படி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
அவர், மரத்தில் கட்டில் கட்டித் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
…………..







