அம்பாசமுத்திரம் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் சிறப்பு விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ் விசாரணையை துவங்கியுள்ளார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களை, அங்கு பணியாற்றிய காவல்துறை ஏஎஸ்பி பல்வீர் சிங் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இதேபோல் மாநில மனித உரிமை ஆணையத்திலும் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இச்சம்பவத்தை கண்டித்தும் காவல் அதிகாரி பல்வீர் சிங்கை கைது செய்ய கோரியும் பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் குரல் கொடுத்து வரும் நிலையில் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மாரியப்பன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக எதிர் கட்சிகளின் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வீர் சிங்கை பணி இடை நீக்கம் செய்துள்ளதாக சட்டப் பேரவையில் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் சந்திரமோகன், கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளர் பெருமாள் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். மேலும் திருநெல்வேலி தனிப்படை உதவி ஆய்வாளர் சக்தி நடராஜன் மற்றும் இரண்டு தனிப்படை காவலர்களும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில் விரிவான விசாரணை மேற்கொள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் -ஐ உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு கடந்த 7ம் தேதி ஆணை பிறப்பித்தது. ஒரு மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அதில் தெரிவிக்கப்பட்டது.
அம்பாசமுத்திரம் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக இன்று திருநெல்வேலிக்கு சிறப்பு விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ் வருகை தந்தார். திருநெல்வேலியில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் ஆகியோருடன் அமுதா ஐஏஎஸ் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் விசாரணை தொடங்கியது.







