ஆசிரியர்களிடம் தவறாக நடந்துகொள்ளும் மாணவர்கள்: உயர்நீதிமன்றம் அறிவுரை

ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்துகொள்ளும் நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. திருவள்ளுர் மாவட்டத்தில் 15 வயது சிறுவனும், 17 வயது சிறுமியும் காதலித்து வந்த நிலையில்,…

ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்துகொள்ளும் நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

திருவள்ளுர் மாவட்டத்தில் 15 வயது சிறுவனும், 17 வயது சிறுமியும் காதலித்து வந்த நிலையில், சிறுமி கர்ப்பமடைந்ததால் பதிவான வழக்கில் சிறுவனுக்கு திருவள்ளூர் சிறார் நீதி குழுமம் மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி சம்பவம் நடந்த போது மைனர் என சிறார் நீதிவாரியத்தில் நிரூபிக்கப்படவில்லை. மேலும், சிறுவனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் அதை ரத்து செய்து நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டார்.

காதல் என்பது இதிகாச காலங்களில் இருந்து சமூகத்தில் தொடர்ந்து வந்தாலும், காதலுக்கும், இனக்கவர்ச்சிக்கும் இடையிலான வித்தியாசங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றன என தெரிவித்த நீதிபதிகள், ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்துகொள்ளும் நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வகையில் தமிழக பள்ளிக்கல்வித் துறை மற்றும் சமூக நலத் துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

மேலும்,ஊரடங்கு காலத்தில் பெற்றோருடன் நெருக்கம் குறைந்து, மின்னணு சாதனங்களில் மூழ்கிய குழந்தைகள், கொரோனாவை விட கொடிய தொற்றாக மனதை கெடுத்துக் கொண்டுள்ளனர் என்று கூறிய நீதிபதிகள், குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் காவல் துறையினருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்திய டிஜிபி சைலேந்திர பாபுவின் பதிவு ஆறுதலளிக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்தனர்.

– கோகுலப் பிரியா, மாணவ ஊடகவியலாளர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.