ஆதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தான் காதல் திருமணத்திற்கு எதிரானவள் அல்ல என மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
ஆதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் 9வது பட்டமளிப்பு விழா, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. இதில் 12 மாணவர்களுக்கு தங்க பதக்கமும், 400 மாணவர்களுக்கு பட்டமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்பித்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், பட்டம் பெறும் மாணவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றார். உங்கள் வாழ்க்கையில் முக்கியமான நாள் என்பதாலும் அதில் உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதாலும் இங்கு வந்திருப்பதாக கூறினார். பல முக்கியமான தவிர்க்கமுடியாத நிகழ்வுகள் இருந்தும் இங்கு மாணவர்களுக்காக தான் வந்துள்ளேன், ஆதி கல்லூரி சிறந்த மாணவர்களை உருவாக்கி வருகிறது.
ஆதி கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற மாணவர்கள் பெரிய ஆட்களாக வரவேண்டும். கல்லூரியின் அலுமினி நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் தயவு செய்து அதிகளவில் புத்தகங்களை படிக்க வேண்டும் என்று தமிழிசை கேட்டுக்கொண்டார். அனைவரும் புதிய வாழ்க்கையில் நுழைவதாக கூறிய அவர், பல பேருக்கு மறுக்கப்பட்ட கல்வியை உங்கள் பெற்றோர்கள் வழங்கியுள்ளனர் எனவே அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள் என்றார்.
தாய் தந்தை சொல்வதை மாணவர்கள் கேட்டு பழக வேண்டும் என்ற அவர், தான் 5 வது படிக்கும் போது என்னவாக போகிறீர்கள் என ஆசிரியர் கேட்டார். அதற்கு நான் எம்.எல்.ஏ ஆக வேண்டும் என சொன்னேன். என் தந்தை ராயப்பேட்டையில் போட்டிபோட்டு விட்டு தோற்ற நேரம் என்பதால் அரசியல்வாதி ஆகக்கூடாது என என் அம்மா என்னை அடித்தார் . அதனால், நான் என் அம்மா ஆசைக்காக மருத்துவர் ஆனேன். பின்னர் என் ஆசைக்காக அரசியல்வாதி ஆனேன் என மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
நீட் தேர்வில் மதிப்பெண் போதவில்லை என மாணவர்கள் யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்யதீர்கள், அனைவருக்கும் கடவுள் ஒரு திட்டம் வைத்திருப்பார். மருத்துவர் ஆக முடியாதவர்கள், மருத்துவமனையே கட்டலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தாய், தந்தை சொல்வதை கேட்டு சரியான நேரத்தில் குடும்ப வாழ்க்கையை தேர்ந்தெடுங்கள், இதை சொல்வதால் தன்னை காதல் திருமணத்திற்கு எதிரானவள் என கூற வேண்டாம். காதல் திருமணம் செய்யலாம், அவர் நம்மை ஏற்றுக்கொள்பவர்களாக இருக்க வேண்டும் ஏமாற்றுபவர்களாக இருக்க கூடாது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.







