காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கு வடக்கே நாளை மாலை கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மத்திய தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்று அழுத்தத் தாழ்வு மண்டலமானது நாளை சென்னைக்கு கிழக்கே சுமார் 430 கி.மீ. தொலைவில் புதுச்சேரிக்கு கிழக்கு -தென்கிழக்கே அதிகாலையில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வட தமிழகக் கடற்கரையை அடைய வாய்ப்புள்ளது என இந்தியா வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் பேசியபோது, காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட மேற்கு திசையில் நகர்ந்து காரைக்காலுக்கும்- ஸ்ரீ ஹரிகோட்டா இடையே புதுச்சேரிக்கு வடக்கே நாளை மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.
இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய மிக கன மழை பெய்யும் என்று குறிப்பிட்ட புவியரசன், இன்று இரவு முதல் நாளை காலை வரை கன மழை இருக்கும் என்றும் விவரித்தார். காற்று வீச்சு அதிகமாக இருக்க வாய்ப்பில்லை என்றும் அதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் குறிப்பிட்ட அவர், கரையை கடக்கும் போது கடற்கரையோர பகுதிகளில் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றடிக்கும் என்றும் குறிப்பிட்டார்.







