தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
கடந்த 2ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. அதன்பிறகு சபாநாயகர் தலைமையில் கூடிய அலுவல் ஆய்வுக் குழு, பிப்ரவரி 5ஆம் தேதி வரை அவையை நடத்த முடிவெடுத்தது. இருந்தாலும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை முற்றிலும் புறக்கணிப்பதாக திமுக, காங்கிரஸ் கட்சிகள் அறிவித்தன.
4 நாட்கள் நடைபெற்ற கூட்டத் தொடரில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி என்ற முக்கியமான அறிவிப்பினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். தொடர்ந்து ஜெயலலிதா பெயரில் பல்கலைக் கழகம் அமைக்கப்படும் எனவும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வழக்குகள் வாபஸ் பெறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 8 முக்கிய மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து, தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை கூட்டத்தை சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார். தேர்தல் வரவுள்ளதால் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதற்காக விரைவில் சட்டப் பேரவை கூட்டத் தொடர் மீண்டும் நடைபெறவுள்ளது.







