மறுசீரமைப்பு பணிகள் நிறைவு; பழைய அட்டவணைப்படி இயக்கப்படும் புறநகர் ரயில்கள்… பயணிகள் நிம்மதி.!

எழம்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வந்த மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து புறநகர் ரயில்கள் பழைய அட்டவணைப்படி இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடை எண்.10 மற்றும் 11ல் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் காரணமாக ஏப்ரல் 5 ஆம் தேதி வரை 5, 6 ஆகிய நடைமேடைகளில் இருந்து புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு நிலையங்களுக்கு எழும்பூர் வழியாக இயக்கப்பட்டு வந்த 204 மின்சார ரயில் சேவைகள் பாதியாக குறைக்கப்பட்டது. ரயில் சேவைகள் குறைப்பால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலை செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பால அடித்தளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதால், இன்று அதிகாலை முதலே பழைய அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனை தொடர்ந்து ரயில் பயணிகள் நிம்மதிக்குள்ளாகியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.